பனிப்பூக்கள் 2022 சிறுகதைப் போட்டி
ஆங்கிலப் புத்தாண்டு, தைப் பொங்கல், உழவர் திருநாள், திருவள்ளுவராண்டு துவக்கம் என ஜனவரி மாதம் கொண்டாட்டங்கள் நிரம்பி வழியும் மகிழ்ச்சியான மாதமாகும். பெருந்தொற்றின் வீரியம் புதிதாய் உருவெடுத்து அச்சுறுத்துவதால், கொண்டாட்டங்கள் சுருங்கி ஒரு கட்டுக்குள் அடங்கிப்போனதென்னவோ உண்மை. ஆனாலும் இன்றைய இணையத் தொழில்நுட்பம் பெருந்தொற்றின் கட்டுப்பாடுகள், முழுமையாகக் கொண்டாட்டங்களை முடக்கிவிடாமல் பார்த்துக் கொண்டதெனலாம்.
பனிப்பூக்கள் சஞ்சிகையின் பயணத்தில் இந்தாண்டு ஒரு மைல்கல்லாக அமைகிறது. வரும் தாய்மொழி தினமான பிப்ரவரி 21 இல், பத்தாம் ஆண்டில் நுழையவுள்ளது பனிப்பூக்கள். இந்தப் பயணம் வாசகர்களாகிய உங்களது அரவணைப்பும், ஆதரவுமின்றி சாத்தியப்பட்டிருக்காது. பனிப்பூக்களின் வாசம் பெருகிட துணையாய் நின்ற வாசகர்கள், படைப்பாளிகள் அனைவர்க்கும் எங்களது உளப்பூர்வமான நன்றிகள். உங்களின் அன்பும் ஆதரவும் தொடர விழையும் சந்தர்ப்பத்தில், பனிப்பூக்கள் குடும்பத்துக்கு மேலும் புதிய உறவுகளை ஏற்படுத்தும் எண்ணத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான எமது சிறுகதைப் போட்டியை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சிக் கொள்கிறோம்.
“விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.” எந்த நிலையிலும் அன்பு குறையாத சுற்றமே நலந்தரும் என்கிறது வள்ளுவம்.
சம்பாதிக்கவும், சாதிக்கவும் உழைப்பதில் உறவுமுறைகள் சற்று பின்னடைந்துதான் போய்விடுகின்றன. ஒரு குறிப்பிட்ட வயதில் திரும்பிப் பார்த்தால் நாம் தனியாக ஓடிக் கொண்டிருப்பதைக் கண்டு நெருடல் உண்டாகும். இன்றைய காலகட்டத்தில் சிந்தித்துப் பார்த்து சீரமைக்கவேண்டிய அம்சங்களில் முதன்மையானது உறவுமுறை.
அத்தகைய மனித உறவுமுறையை இந்தாண்டின் சிறுகதைப் போட்டியின் மையக் கருவாகக் கொள்வது பொருத்தமாக அமையுமெனத் தோன்றுகிறது. உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாற்றலைச் சிறுகதைகளாகப் படைத்திட அன்போடு அழைக்கிறோம்.
பங்கு பெற்றுவோர் விபரம் - இதைப் பூர்த்தி செய்த பின்னர் போட்டி விபரங்கள் அனுப்பி வைக்கப்படும்